பரமத்திவேலூர் அருகே சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது 300 லிட்டர் ஊறல் அழிப்பு

பரமத்திவேலூர் அருகே சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது 300 லிட்டர் ஊறல் அழிப்பு

Update: 2021-06-10 21:09 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 300 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
சோதனை
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மேலும் சிலர் மறைவான பகுதியில் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இவ்வாறு வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் காய்ச்சி விற்பவர்களை போலீசார் ஆங்காங்கே பிடித்து கைது செய்தும், மதுபானங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் பரமத்திவேலூர் அடுத்து புதுவெங்கரை அம்மன் கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் புது வெங்கரையம்மன் கோவில் அருகே‌ உள்ள குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். 
ஊறல் அழிப்பு
சோதனையில் குழந்தைவேல் தோட்டத்தின் மையப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு ‌வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.‌ மேலும் அங்கிருந்த 18 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கள்ளிப்பாளையத்தை சேர்ந்த சசிமணி (வயது 25) என்பவரை கைது செய்த போலீசார் தலைமறைவான குழந்தைவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்