ரூ.55 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

திருப்பூர் அருகே தோழியின் ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க ரூ.55 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-10 21:14 GMT
திருப்பூர்
திருப்பூர் அருகே தோழியின் ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க ரூ.55 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி தோழி
திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). கல்லூரி மாணவர். இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழியின் ஆபாச புகைப்படத்தை அந்தப் பெண்ணின் சகோதரர் முகநூலுக்கு கடந்த 5-ந் தேதி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தனக்கு ரூ.55 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் தோழியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று அந்த இளம் பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக தெரிகிறது.
ஒரு தலை காதல்
இதை தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவுப்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நவீன்குமாரை பிடித்து விசாரித்ததில் அவருடைய செல்போனில் கல்லூரி தோழியின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய வீசாரணையில், நவீன்குமார் அந்த பெண்ணை கல்லூரியில் படிக்கும் போது ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
வாலிபர் கைது
இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் பறிக்கும் எண்ணத்துடன் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நவீன்குமாரை போலீசார் நேற்று கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்