சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-11 05:05 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த சாமினோ ஜேசையோ (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் பெல்ட் போடும் பகுதியில் ரகசிய அறை வைத்து அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அவரிடம் இருந்து ரூ.63 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாமினோ ஜேசையாவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்