கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-12 00:14 GMT
அச்சரப்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் அச்சரப்பாக்கம் மலையையொட்டிய பள்ளிப்பேட்டை மலை மற்றும் அதனையொட்டிய வனம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலப்பரப்புகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 65 ஏக்கருக்கும் மேல் நில ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் மயில்கள், மான்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும் அவைகள் இடப்பெயர்ச்சி செய்து வாழ்கிறதா என்பது தெரியவில்லை. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு செய்திருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ., தாசில்தார் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் தொடர்பான அறிக்கையை 4 வாரத்திற்குள் கொடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மதுராந்தகம் தாசில்தார் மட்டத்திலும், வருவாய் ஆர்.டி.ஓ. மட்டத்திலும் விரிவான விசாரணை மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அச்சரப்பாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மழை மலை மாதா ஆலயம் அமைந்துள்ள மலை மற்றும் அதனையொட்டிய ஆக்கிரமிப்பு நிலப்பரப்புகள் இடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அவருடன் மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ. லட்சுமிபிரியா, மதுராந்தகம் தாசில்தார் பர்வதம்மாள், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, மாலதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்