நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு
கொடைக்கானலில், நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில், நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். தற்போது தடுப்பணையில் ரூ.10 கோடி மதிப்பில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஏரிக்கு தண்ணீர் வருகிற 4 இடங்களில் தடுப்பு அணைகள் கட்டப்பட உள்ளது. மேலும் அணையை சுற்றியுள்ள 12 பகுதிகளை மேம்படுத்தவும், அணையின் கரையை உயர்த்தி பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் முருகேசன் பார்வையிட்டு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி பொறியாளர் சரவணகுமார், இளநிலை பொறியாளர் பட்டுராஜன் உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நகர்ப்பகுதியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெறுகிற ரூ.10 கோடி மதிப்பிலான பணிகளையும் மண்டல செயற்பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.