ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கைதான கடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் கைதான கடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-06-13 17:18 GMT
கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என். சாவடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரபு. இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 28.2.2021 அன்று எஸ்.என்.சாவடி மேட்டுத்தெருவை சேர்ந்த இளங்கோ மகன் தங்கபாண்டியன் என்கிற ஏழுமலை (வயது 35). சதீஸ் (23), வெங்கடேசன் (25) ஆகிய 3 பேரும் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தனர்.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான தங்கப்பாண்டியன் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு என 10 வழக்குகள் உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதையடுத்து தங்கப்பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.அதன்படி தங்கபாண்டியனை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்