தாம்பரத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் தனியார் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருபவர் பிரேம் ஆனந்த். இவர், ஊரடங்கை மீறி உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

Update: 2021-06-14 05:29 GMT
ஆலந்தூர்,

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு இவரது உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிக்கு வந்த 27 வயது இளம்பெண்ணிடம் சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி பிரேம் ஆனந்த் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதற்கிடையில் பிரேம் ஆனந்திடம் அந்த பெண் பேசிய செல்போன் உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் பிரேம் ஆனந்த், “நான் செய்தது தவறுதான். நேரில் வந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” என அந்த பெண்ணிடம் கூறுகிறார்.

அதை ஏற்க மறுக்கும் அந்த பெண், தன்னுடைய பயிற்சி கட்டணத்தை திரும்ப வழங்கும்படியும், தொடர்ந்து பயிற்சிக்கு வரமாட்டேன் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டிக்கிறார். இது குறித்து ஆன்-லைன் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அப்பெண் புகார் செய்து உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சேலையூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யாவிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார் பெறப்பட்டுள்ளது. அதில், பயிற்சி கூடத்தில் நடந்த விபரங்கள் பற்றி எதுவும் தெளிவாக குறிப்பிடப்படாததால் வழக்கு பதிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளதாக கூறினார். எனினும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

மேலும் செய்திகள்