கொரோனாவுக்கு 6 முதியவர்கள் பலி

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Update: 2021-06-14 20:24 GMT
பெரம்பலூர்:

6 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 13 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 10 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 14 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களமேடு கே.கே.நகரை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், செஞ்சேரி செட்டியார் தெருவை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ராயல் நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், குன்னம் தாலுகா புதுப்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டியும், பெரம்பலூர் செட்டியார் தெருவை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியும், கீழமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 774 பேர்
நேற்று மட்டும் 150 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 774 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 936 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. நேற்று மாவட்டத்தில் 2,350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 170 கோவிஷீல்டு தடுப்பூசியும், 790 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

மேலும் செய்திகள்