கோஷ்டி மோதல்; 7 பேர் கைது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) விவசாயி. இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது குள்ளப்புரம்-ஜெயமங்கலம் ரோட்டில் மதுபானக்கடை அருகே சிந்துவம்பட்டியை சேர்ந்த ராமசாமி (60) என்பவர் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.
அந்த மாடுகளை ஓரமாக கொண்டு செல்லும்படி மணிகண்டன் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். மோதலில் ராமசாமி, மணிகண்டன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை சிந்துவம்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி (26) என்பவர் தனது நண்பரை பார்க்க குள்ளப்புரம் சென்றார்.
அதைப் பார்த்த மணிகண்டனின் நண்பர்கள் ஆத்திரமடைந்து அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், கோகுல் (25), விமல் ராஜ் (30) உள்பட 7 பேரை கைது செய்தனர். இதையறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.