பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை

பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-16 18:33 GMT
பரமத்திவேலூர்:
கல்லூரி மாணவி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர்கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் காவியா (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் காவியா வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்து வந்தார்.
கடந்த 12-ந் தேதி பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது காவியா சமையல் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனோகரன், சாந்தி ஆகியோர் அவரை திட்டியதாக தெரிகிறது. இதில் காவியா மனவேதனை அடைந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் திடீரென அவர் வீட்டு சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டார். இதனால் வலியால் அலறிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காவியா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்