கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பலி

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-06-16 18:45 GMT
கரூர்
மெக்கானிக்கடை உரிமையாளர் பலி
கரூர் வெங்கமேடு பெரியகுளத்து பாளையத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 39). டூவீலர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் எத்திராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பரான வீரராக்கியத்தை சேர்ந்த பார்த்திபன் (22) என்பவரை அழைத்துக்கொண்டு கரூர்-திருச்சி சாலையில் புலியூர் அருகே வந்து கொண்டிருந்தார். 
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எத்திராஜ், பார்த்திபன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட எத்திராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
3 பேர் காயம்
பார்த்திபன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருமாநிலையூர் சேர்ந்த முருகானந்தம் (22) மற்றும் ஆனந்தபாபு (25) ஆகியோர் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், முருகானந்தம், ஆனந்தபாபு ஆகியோரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 
பின்னர் எத்திராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்