பர்கூர் அருகே சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை

பர்கூர் அருகே சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை

Update: 2021-06-17 00:09 GMT
பர்கூர்:
பர்கூர் அருகே சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எலக்ட்ரீசியன்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி வரலட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சுகுமாருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. 
இந்தநிலையில் நேற்று வரலட்சுமி தன்னுடைய மகன், மகள்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சுகுமார் மட்டும் வீ்ட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த அவர்கள் சுகுமார் வீட்டுக்கு சென்றனர். சொத்து பிரச்சினை தொடர்பாக சுகுமாருக்கும், அவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 
பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கம்பு, கட்டையால் சுகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பர்கூர் போலீசார் சுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=======

மேலும் செய்திகள்