சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு

சோழவரம் ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது, பள்ளி மாணவர்கள் 2 பேர் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-06-18 04:49 GMT
ஏரியில் குளித்தனர்
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரபு. லாரி டிரைவர். இவருடைய மகன் மோகன்(வயது 10). அதேபோல் எடப்பாளையம் பிள்ளையார் 
கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகன் கோகுல்(10). நண்பா்களான இவர்கள் இருவரும் எடப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்று மாலை மோகன், கோகுல் 
இருவரும் தங்களது நண்பர்களான மேலும் 3 பேருடன் சேர்ந்து சோழவரம் ஏரியில் குளித்தனர். நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக ஏரியில் விளையாடியபடி குளித்து கொண்டிருந்தனர்.

சேற்றில் சிக்கி பலி
அப்போது மோகன், கோகுல் இருவரும் திடீரென ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது சேற்றில் சிக்கி கொண்டனர். இதனால் வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 
சகநண்பர்கள், வீட்டுக்கு ஓடிச்சென்று தகவல் தெரிவித்தனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் மூழ்கி பலியான 2 மாணவர்களின் 
உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்