பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி

சேரன்மாதேவி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்

Update: 2021-06-18 20:09 GMT
சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி ஓடைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோயில்பிச்சை மகன் ஆசீர் (வயது 40). இவர் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி ( 36) என்ற மனைவியும், ரெனி (13) என்ற மகளும், ஜோவின் (8) என்ற மகனும் உள்ளனர்.

சென்னையில் கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்த ஆசீர் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை தனது குழந்தைகளுக்கு நுங்கு பறிப்பதற்காக அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறியுள்ளார். பனை உச்சிக்கு சென்ற ஆசீர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்