விவசாயியிடம் பணம் பறிப்பு

களக்காடு அருகே விவசாயியிடம் இருந்து பணம் பறித்து சென்ற 7 பேரை போலீசார் வலைவீச்சு தேடி வருகிறார்கள்.

Update: 2021-06-19 19:12 GMT
களக்காடு:

களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). விவசாயியான இவர் தனது மொபட்டில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து பத்மநேரிக்கு சென்று கொண்டிருந்தார். 

களக்காடு நாகன்குளம் விலக்கு அருகே சென்றபோது ஒரு ஆம்னி வேனில் நாங்குநேரியை சேர்ந்த கண்ணன், கள்ளிகுளத்தை சேர்ந்த ஸ்ரீமுருகன், சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துவேல், சோமசுந்தரம், குரலி வானுமாமலை, வேல் ஆறுமுகம், முருகன் ஆகிய 7 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று மொபட்டை வழிமறித்து, சுப்பிரமணியனிடம் மது குடிக்க ரூ.1,000 கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளை கழுத்தில் வைத்து மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.320-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி சுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்