ஈரோட்டில் நீண்ட வரிசையில் நின்று அம்மா உணவகங்களில் பார்சல் வாங்கி சென்ற பொதுமக்கள்

ஈரோட்டில் நேற்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று அம்மா உணவகங்களில் உணவு வாங்கி சென்றனர்.

Update: 2021-06-20 21:41 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, அரசு ஆஸ்பத்திரி வளாகம், சூளை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், சின்ன மார்க்கெட் பகுதி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற உணவகங்களை விட இங்கு விலை குறைவு என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏழை தொழிலாளர்கள், வறுமையில் வாடும் முதியவர்கள் அம்மா உணவகங்களில் வயிறார சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக பார்சலில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக அம்மா உணவகங்கள் இருந்து வருகின்றன. தற்போது ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும், தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று அம்மா உணவகங்களில் உணவு வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்