சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-21 20:59 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் விஜய்(வயது 21). கூலி தொழிலாளியான இவர், 15 வயதுடைய ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு மூக்கில் வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிந்து அவரை கைது செய்தார்.
இந்நிலையில், பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் உள்ளிட்டவைகள் பற்றி எடுத்துக்கூற வேண்டும். மேலும் பெற்றோர்கள் இதுபோன்ற குற்றங்கள் எங்கேனும் நடந்தாலோ? அல்லது கேள்விப்பட்டாலோ? மறைக்காமல் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்