காந்திநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு

காந்திநகரில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-06-22 04:39 GMT
காட்பாடி

நகைகள் திருட்டு

காட்பாடி காந்திநகர் 17-வது கிழக்கு குறுக்கு தெருவில் வசிப்பவர் சரோஜினி (வயது 70). இவருடைய கணவர் கிருஷ்ணன் கடந்த ஒரு ஆண்டு முன்பு இறந்து விட்டார். அதனால் இவர் தன்னுடைய வீட்டை கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பூட்டிக்கொண்டு பிரம்மபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ஸ்ரீதரன் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு மகனுடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 10-ந் தேதி சரோஜினியின் கடைசி மகன் நித்யா காந்திநகர் வீட்டுக்குச் சென்று நில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரோஜினியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனை பார்த்த அவருடைய உறவினர் சரோஜினிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து சரோஜினி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்