குன்னூரில் முழு கொள்ளளவை எட்டிய ரேலியா அணை
குன்னூரில் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள பந்துமி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ரேலியா அணை அமைந்துள்ளது. இந்த அணை ஆங்கிலேயேர் காலத்தில் குன்னூர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 43.7 அடியாகும். ஊட்டி அருகே மைனலையில் இருந்து வரும் நீரோடைகள் அணையின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக மைனலை நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் குன்னூர் அருகே உள்ள ரேலியா அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
இதனால் ரேலியா அணை முழு கொள்ளளவான 43.7 அடியை தொட்டது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை நிரம்பி வழியும் நிலை உள்ளது.
ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியதால், குன்னூர் பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.