கோத்தகிரியில் நிழற்குடைக்குள் தஞ்சம் புகுந்த சருகு மான்
கோத்தகிரியில் நிழற்குடைக்குள் சருகு மான் தஞ்சம் புகுந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் குடியிருப்போர் சங்க பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள நிழற்குடைக்குள் நேற்று காலை 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சருகு மான் ஒன்று தஞ்சம் புகுந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், சருகு மானை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அந்த மானை லாங்வுட் சோலைக்கு கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோத்தகிரி பஸ் நிறுத்தத்தில் பிடிபட்டது ‘ஸ்பாட்டெட் மவுஸ் டீர்’ எனப்படும் அரிய வகை சருகு மான் ஆகும். அது வனப்பகுதியில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்கலாம் என்றனர்.