ஆந்திராவுக்கு காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் கைது

ஆந்திராவுக்கு 500 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-22 16:53 GMT
வேலூர்

ரேஷன் அரிசி கடத்தல்

காட்பாடி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் வேலூர் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதிகாரிகள் விசாரணையில், அந்த அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அரிசியை கடத்தியதாக ஆந்திராவை சேர்ந்த சேகர் (வயது 33), காட்பாடி மதிநகரை சேர்ந்த சேகர் (49) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அரிசியை வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட மதிநகரை சேர்ந்த சேகர், ஆந்திர மாநிலத்தில் மாங்காய் ஜூஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த கம்பெனியில் உள்ள உணவகத்தில் தொழிலாளர்கள் சாப்பிட்டு வேலை செய்கின்றனர். அவர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி உள்ளார் என்றனர்.

மேலும் செய்திகள்