வந்தவாசி அருகே; விவசாயி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

வந்தவாசி அருகே கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-06-22 17:35 GMT
வந்தவாசி

வந்தவாசி அருகே கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விவசாயி சாவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி கடந்த 10-ந் தேதி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வீடு திரும்பவில்லை. தேடியபோது அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் முனுசாமியின் உடலை 11-ந் தேதி அடக்கம் செய்துள்ளனர்.

உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

இந்த நிலையில் முனுசாமியின் மனைவி சந்திரா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களது நிலத்துக்கு அருகில் உள்ள ஒருவரது நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிதான் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும் வடவணக்கம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் முனுசாமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தாசில்தார் திருநாவுக்கரசு முன்னிலையில் முனுசாமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதையொட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்