அம்மா சிமெண்டு வழங்கவில்லை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளி தர்ணா

பணம் செலுத்தி பல மாதங்களாகியும் அம்மா சிமெண்டு வழங்கவில்லை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-06-23 02:16 GMT
படப்பை, 

படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள காட்ரம்பாக்கம் ஒரியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அரசு சார்பில் அம்மா சிமெண்டு திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்கப்படும் சிமெண்டு் வேண்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.19 ஆயிரம் வங்கியில் செலுத்தி ரசீது வாங்கி உள்ளார். அவருக்கு இதுநாள் வரை சிமெண்டு வழங்கப்படும் குடோனில் இருந்து சிமெண்டு வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமர்ந்து பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பன்னீர்செல்வத்திடம் நீங்கள் வங்கியில் பணம் செலுத்தி உள்ள ஆதாரங்களை எடுத்து கொண்டு சம்பந்தப்பட்ட சிமெண்டு குடோனுக்கு சென்று அங்கு உள்ள அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

மேலும் செய்திகள்