தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய 2 பேர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி
சென்னை அம்பத்தூர்-பட்டரவாக்கம், வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர்-பட்டரவாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பலியான இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்தது. ஆனால் அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை. அதுபற்றி ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.