மாமல்லபுரத்தில் குளத்தில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

மாமல்லபுரம் பொய்கை குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-25 04:16 GMT
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பொய்கை குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சென்ற போலீசார் 5 அடி ஆழமுள்ள குளத்து நீரில் மிதந்து கிடந்த அந்த வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

மேலும் இவரது சட்டை பாக்கெட்டில் இவரை பற்றி எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இவர் சென்னை அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்நதவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாமல்லபுரம் வந்த இவர் குடும்ப பிரச்சினையால் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக இவரை யாராவது அடித்துக்கொலை செய்து குளத்தில் வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்