தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக சரிவு

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக சரிந்தது.

Update: 2021-06-25 20:01 GMT
பென்னாகரம்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும்  வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 8,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 95.42 அடியை எட்டி உள்ளது. 
இதேபோல் கபினி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 75.67 அடியை எட்டி உள்ளது. 

இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6,136 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு  3 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 9 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை மாலைக்குள் ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்