மின்சாரம் தாக்கி பெண் சாவு

காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.

Update: 2021-06-26 17:07 GMT
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 70). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் 4-வதாக பிறந்தவர் தமிழ்ச்செல்வி (36). பிறவியிலேயே 2 கால்களும் ஊனமுற்ற பெண். இவருக்கும், நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ராசையா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்செல்வி காயல்பட்டினத்தில் தகப்பனார் பராமரிப்பில் இருந்து வந்தார். மேலும் தனது குழந்தைகளை வளர்க்க அவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தார். வீட்டின் முன்பு ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்தி அதன் மூலம் தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் தமிழ்ச்செல்வி மின்சாரம் தாக்கி கீழே கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்