பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் சாவு

விக்கிரவாண்டி அருகே சோகம்

Update: 2021-06-28 17:10 GMT
விக்கிரவாண்டி, 
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). கூலி தொழிலாளியான இவருக்கு தனசேகரி (35) என்கிற மனைவியும், கோகுலபிரியன் (10) என்ற மகனும், சத்யபிரியா (8) என்ற மகளும் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுதொடர்பாக அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. 
இந்த நிலையில் சம்பவத்தன்று தனசேகரிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருடைய உடலிலும் தீ பரவி எரிந்தது. வலியால் அலறிய தம்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோரை இழந்து 2 குழந்தைகளும் பரிதவித்து வருவதால், அக்கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. 
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்