மத்திய, மாநில அரசுகள் கூடுதல் மானியம் வழங்கி கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய, மாநில அரசுகள் கூடுதல் மானியம் வழங்கி கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-07-02 11:51 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல. ஒருபுறம் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் அதன் மீதான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

2019-ம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயு விலை மீதான மானியம் சிலிண்டருக்கு 243.98 ரூபாயாக இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த சில வாரங்களாகத் தான் ரூ.24.95 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதை உணர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் சமையல் எரிவாயு சிலிண்டர் மீது கூடுதல் மானியம் வழங்கி, சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்