திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா செய்தனர்.

Update: 2021-07-02 14:12 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் அம்பேத்கர்நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அம்பேத்கர்நகரில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து கொண்டனர். இதற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமை தாங்கினார்.
இதையடுத்து அதிகாரிகள் வெளியே வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிஅளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்