சாராய வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-07-02 16:53 GMT
மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் குறவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் விருத்தாசலம் தாலுகா தெற்கு வெள்ளூரை சோ்ந்த பன்னீர்செல்வம் மகன் பாண்டிதுரை(வயது 31) என்பதும், 110 லிட்டர் சாராயம், 21 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து பாண்டிதுரையை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  பாண்டிதுரை மீது மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் 3 சாராய வழக்குகளும், விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவில் ஒரு சாராய வழக்கும் உள்ளது. 

இதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பாண்டிதுரையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து பாண்டிதுரையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாண்டிதுரையிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்