பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

சின்னசேலம் அருகே பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

Update: 2021-07-02 17:28 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் பிரகாஷ்ராஜ்(வயது 22). இவர் சம்பவத்தன்று  கச்சிராயப்பாளையம்-சின்னசேலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை திடீரென ஹெல்மெட்டால் தாக்கி பணப்பையை பறித்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பிரகாஷ்ராஜை தாக்கிய மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார் சின்னசேலத்தை அடு்த்த கனியாமூர் கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி மாமந்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமதுரபிக் மகன் முகமது ராஷூத்(வயது 21), பசுங்காயமங்கல ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவபிள்ளை மகன் நிதிஷ்குமார் (19), தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார்(20) என்பதும் பெட்ரோல் பங்க் ஊழியர் பிரகாஷ்ராஜை தாக்கி அவரது பணப்பையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ கொள்ளையடித்து சென்றதும், கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விதவைப் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்