குதிரை வண்டி பயணத்துக்கு மாறிய மக்கள்

குதிரை வண்டி பயணத்துக்கு மக்கள் மாறியுள்ளனர்.

Update: 2021-07-02 17:35 GMT
கீரமங்கலம், ஜூலை.3-
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் மோட்டார் சைக்கிள்களில் செல்ல முடியாமல் குதிரை வண்டி பயணத்துக்கு மக்கள் மாறியுள்ளனர்.
குதிரை வண்டி
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. அதேபோல் டீசல் விலையும் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் பயன்படுத்துவோர் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் வழியாக ஒரு குதிரை வண்டியில் 4 பேர் பயணம் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது கூறியாவது:-
நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர்கள். பந்தய குதிரை வண்டி வைத்திருக்கிறோம். கொரோனா ஊரடங்கால் எந்த ஊரிலும் பந்தயங்கள் நடத்தப்படுவதில்லை. குதிரையை ஓட்டாமல் வைத்திருந்தால் பந்தயத்தில் குதிரைகள் தடுமாறும்.
தற்போது, பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கிக்கு வேலை விஷயமாக 4 பேர் செல்ல வேண்டி இருந்தது. ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் செல்ல முடியாது. அவ்வாறு சென்றாலும் கூடுதல் செலவு ஏற்படு்ம்.
பெட்ரோல் செலவு மிச்சம்
இதனால், நாங்கள் குதிரை வண்டியை பயன்படு்த்தி உள்ளோம். இதன் மூலம் குதிரைக்கு பயிற்சி கிடைப்பது மட்டுமின்றி பெட்ரோல் செலவு மிச்சப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்