மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.

Update: 2021-07-02 19:57 GMT
திருச்சி
ஜீயபுரம்
திருச்சி வடக்கு ஆண்டார் வீதி தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருடைய மகன் மாதவன் (வயது 33). இவர், முத்தரசநல்லூர் அருகே உள்ள முருங்கப்பேட்டை பகுதியில் குடியிருந்து வந்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நேற்று வேலைக்கு மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது, திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாதவன், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கரூர் மாவட்டம் செம்மடை நடுப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான அறிவழகன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாதவனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்