போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2021-07-02 21:18 GMT
உடுமலை
உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசு பல தளர்வுகளை நடைமுறை படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட சில வகை கடைகளை தவிர பெரும்பாலான பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி உடுமலை பை-பாஸ் சாலையில், மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த கடைகளுக்கு வருகிறவர்கள் தங்களது கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலை பகுதியிலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
அதனால் அந்த கடைகளுக்கு சரக்குகளை கொண்டு வரும் சரக்கு வாகனங்களும் வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்குகளை (பொருட்கள்) இறக்கி கடைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஓட்டுனர்கள் அவதி
இந்த சாலை, போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். அப்படிபட்ட சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்படுவதால், அந்த வழியாக வரும் மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அந்த இடத்தை கடந்து செல்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.
அதனால் அந்த இடத்தில் சாலையில் வாகனங்கள் நிற்காத அளவிற்கு உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ளவேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்