கிழக்கு தாம்பரத்தில் வீட்டிலேயே பிறந்த குழந்தை இறந்தது - பையில் போட்டு தெருமுனையில் வைத்து சென்ற கொடூரம்

கிழக்கு தாம்பரத்தில் வீட்டிலேயே பிரசவம் ஆனதால் இறந்த குழந்தையை பையில் போட்டு தெருமுனையில் வைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-03 05:54 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபரின் பெற்றோர், 17 வருடங்களுக்கு முன்பு 3 வயதான பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். சில ஆண்டுகளில் அவரது பெற்றோர் இறந்து விட்டனர். 13 வயதில் இருந்தே அந்த வாலிபர் வேலைக்கு சென்று, அந்த குழந்தையை வளர்த்து வந்தார்.

தற்போது 20 வயதான அந்த பெண்ணுடன், வாலிபர் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியைச்சேர்ந்த வாலிபர் ஒருவரை அந்த பெண் காதலித்ததாக தெரிகிறது. அதன் பின்னர் காதல் முறிந்துள்ளது.

இந்தநிலையில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். நேற்று காலை திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் அந்த குழந்தை இறந்து விட்டது. அதனால் ரத்த போக்கு அதிகமாகி அவர் மயங்கினார்.

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த வாலிபர், தங்கை மயங்கி கிடப்பதும், அருகில் குழந்தை இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையின் உடலை பையில் போட்டு யாருக்கும் தெரியாமல் தெரு முனையில் வைத்து விட்டு, தங்கையை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, நடந்த விவரங்களை கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சந்தேக மரணம் பிரிவில் சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பெற்றோர் தத்தெடுத்து தங்கை போல் வளர்த்து வந்த அந்த பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததால் அவர் கர்ப்பமானதும், இருவரின் ஆதார் கார்டில் தந்தை பெயர் ஒன்றாக இருந்ததால் ஆஸ்பத்திரியில் கேட்பார்களே என ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நடந்தபோது குழந்தை இறந்துவிட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்