இழப்பீடு தொகை வழங்கக்கோரி உயர்மின் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டம்

வேட்டவலம் அருகே இழப்பீடு தொகை வழங்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-07-03 14:31 GMT
வேட்டவலம்

வேட்டவலம் அருகே இழப்பீடு தொகை வழங்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். 

உயர் மின்கோபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே காட்டுமலையனூர் கிராமத்தை சேர்ந்த விஜியராஜ் என்பவரின் மனைவி லட்சுமிகாந்தம்மாள் (வயது 53). விஜியராஜ் இறந்து விட்டார். 

லட்சுமி காந்தம்மாளுக்கு அதே பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இவரது நிலத்தில் பவர் கிரிட் நிறுவனத்தின் மூலம் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உயர் மின் கோபுரங்களில் மின்வயர்கள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 
இந்த நிலையில் நேற்று தனது நிலத்திற்கு லட்சுமிகாந்தம்மாள் வந்தார். 

இழப்பீடு தொகை

அப்போது நிலத்தில் அமைத்த உயர் மின்கோபுரத்திற்கு இழப்பீடு தொகையை முறையாக வழங்கவில்லை எனக்கூறி உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர் இழப்பீடு தொகை குறைவாக வழங்கப்பட்டதாகவும், மீதி தொகையை முழுவதும் வழங்கினால் தான் போராட்டத்தை கை விடுவேன் என்று கூறினார். 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் கூறினார். அதன்பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார்.
இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளத்தில் இறங்க போராட்டம்

இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயர் மின் கோபுரம் அமைக்க பள்ளம் தோண்டியபோது எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்