ஜோலார்பேட்டை அருகே; கிணற்றில் ரெயில்வே ஊழியர் பிணம்
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் ரெயில் ஊழியர் பிணமாக கிடந்தார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர், திருப்பத்தூர் ரெயில்வே காலனியை சேர்ந்த ரூபேஷ்குமார் (வயது 38) என்பதும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவருக்கு திருமணமாகி காயத்ரிதேவி என்ற மனைவியும் நவீன் கேசவ் (7) என்ற மகனும் உள்ள நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது.
மது அருந்திவிட்டு கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தாயார் ரேவதி அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.