பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் திருட்டு

வங்கி மேலாளர்போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 3 லட்சம் திருடப்பட்டு உள்ளது.

Update: 2021-07-03 18:00 GMT
ராமநாதபுரம், 
வங்கி மேலாளர்போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 3 லட்சம் திருடப்பட்டு உள்ளது.
காலாவதி
கீழக்கரை அருகே உள்ளது காங்சிரங்குடி. இந்த ஊர் பக்கீர் அப்பா தர்கா பகுதியை சேர்ந்தவர்அமிர்தவள்ளி (வயது28). இவரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் கீழக்கரை  வங்கி மேலாளர் பேசுவதாக கூறி உங்களின் வங்கி கணக்கின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகிவிட்டது. அதனை புதுப்பித்து தருவதற்காக தொடர்பு கொண்டு உள்ளேன். உங்கள் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவித்தால் உடனடியாக புதுப்பித்து தருவதாக கூறியுள்ளார். 
தனக்கு உதவுவதற்காக வங்கி மேலாளரே அழைத்துள்ளாரே என்று மகிழ்ந்த அமிர்தவள்ளி உடனடியாக தனது வங்கி ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவித்துள்ளார். அந்த கார்டின் 4 இலக்க ரகசிய எண்ணை தெரிவிக்குமாறு கேட்டதும் அதனையும் விவரம் அறியாமல் அமிர்தவள்ளி அளித்துள்ளார். 
அதிர்ச்சி
இந்த எண்களை பெற்றுக்கொண்ட மோசடி மர்ம நபர் தனது வேலை முடிந்துவிட்டதாக கூறி சில நிமிடங்களில் உங்களின் கார்டு புதுப்பிக்கப்பட்டுவிடும் என்று கூறி நன்றி தெரிவித்து இணைப்பினை துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தில் அவரின் செல்போன் எண்ணிற்கு அவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததும் அமிர்த வள்ளி அதிர்ச்சி அடைந்துள்ளார். 
தொடர்ந்து 3 நாட்கள் இவ்வாறு வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் திருடப்பட்டு மோசடி செய்யபப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார்.
விழிப்புணர்வு
இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார். வங்கி நிர்வாகத்தினர் எக்காரணம் கொண்டு வங்கி ஏ.டி.எம். கார்டினை புதுப்பிக்க வங்கியில் இருந்து நாங்கள் அழைக்க மாட்டோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
வங்கி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பணம் மோசடி செய்யும் கும்பல் குறித்து பல்வேறு வழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், பல மோசடி சம்பவங்களை கேள்விப் பட்டாலும் ஏமாறும் நபர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் தங்களின் மோசடி செயலை கணகச்சிதமாக செய்துகொண்டுதான் உள்ளனர்.

மேலும் செய்திகள்