பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற லோடு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற லோடு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

Update: 2021-07-06 02:57 GMT
பூந்தமல்லி,

திருவேற்காட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். சிப்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் தயாரிக்கும் சிப்ஸ்களை கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக லோடு வேன் ஒன்றை வைத்து உள்ளார். இதனை சங்கர் (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள கடைகளுக்கு சிப்ஸ்களை இறக்கிவிட்டு லோடு வேனை திருவேற்காடு நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அருகே வந்தபோது வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

அவர் இறங்கிய சிறிதுநேரத்தில் லோடு வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் லோடு வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீசார், தீயில் சேதமடைந்த லோடு வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிப்ஸ் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.20 ஆயிரமும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்