செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது

செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது.

Update: 2021-07-06 04:58 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் வேலு (வயது 41). தொழிலாளியான இவரை நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் தனிப்படையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அதில் அவர்கள் சேட்டு (எ) பாலாஜி (23) உள்ளிட்ட 6 பேர் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள கொட்டைசப்பி சுரேஷ் தனது கூட்டாளிகள் மூலம் கடந்த 16-ந்தேதி சேட்டு பாலாஜியின் அண்ணனான வடிவழகன் என்பவரை சென்னை சேத்துப்பட்டில் வெட்டிகொலை செய்துள்ளனர்.

வடிவழகனை கொலை செய்ததில் கொட்டைசப்பி சுரேஷுக்கு முக்கிய பங்கு இருப்பதால் பழி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் அவரது மாமனான வேலுவை, தம்பி சேட்டு (எ) பாலாஜி அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

சேட்டு (எ) பாலாஜி கடந்த வருடம் திருப்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிட்டதக்கது.

மேலும் செய்திகள்