தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே திருமணமான பெண்ணுடனான தொடர்பை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-07 20:10 GMT
பத்மநாபபுரம், 
தக்கலை அருகே திருமணமான பெண்ணுடனான தொடர்பை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணுடன் தொடர்பு
குமரி மாவட்டம் தக்கலை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (வயது 21).
அபிஷேக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி வந்தார். அப்போது, திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர், மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக அபிஷேக் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. 
வாலிபர் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயசங்கர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் அபிஷேக்கை காணவில்லை. உடனே, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்ல. இதனால், சந்தேகமடைந்த ஜெயசங்கர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். 
அப்போது அபிஷேக் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான பெண்ணுடன் இருந்த தொடர்பை, தந்தை கண்டித்ததால் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்