சின்னசேலம் அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்

சின்னசேலம் அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்

Update: 2021-07-11 17:32 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி சுதா(வயது 35). சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் பயிரிட்டுள்ள சேனைக்கிழங்குக்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை அமுக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அவரை தடுத்த சுதாவை மர்மநபர் தாக்கி அருகில் உள்ள ஓடையில் தள்ளினார். 

இதனால் பயந்து போன சுதா கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து மர்மநபரை துரத்திப் பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மங்களூர், வண்ணார தெருவை சேர்ந்த மாயவன் மகன் சின்னையன்(27) என்பதும், சின்னசேலம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது. வயலில் சுதா தனியாக நின்றதை பார்த்து அவரிடம் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்