டயர்கள் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது

டயர்கள் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-07-11 20:05 GMT
பெரம்பலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என மொத்தம் 13 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மதியம் ஒரு வாடகை சுற்றுலா வேனில் புறப்பட்டார். வேனை டிரைவர் ஹரி என்பவர் ஓட்டினார். மாலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் மேம்பாலம் அருகே வந்தபோது வேனின் பின்பக்க டயர் ஒன்று வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதியதில், முன்பக்க டயர் ஒன்றும் வெடித்தது. இதனால் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி விஜயகுமார், அவரது தாய் கமலா, மனைவி சத்யா ஆகியோர் காயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான சுற்றுலா வேனை நெடுஞ்சாலைத்துறை ரோந்து போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்