திருவள்ளூர் அருகே மினி பஸ் மோதி விபத்து; கட்டிட தொழிலாளி பலி

திருவள்ளூர் அருகே நடந்து சென்ற கட்டிட தொழிலாளி மீது மினி பஸ் மோதிய விபத்தில் அவர் பலியானார்.

Update: 2021-07-12 06:22 GMT
கட்டிடதொழிலாளி
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 55). கட்டிடதொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு தன்னுடைய வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையோரம் நடந்து வந்தபோது, சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மினிபஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

பரிதாப பலி
இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே மாரி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து இறந்த மாரியின் மகன் பிரகாஷ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய மினி பஸ் டிரைவர் யார் ? என வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு விபத்து
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் குச்சிக்காடு அண்ணா தெருவை சேர்ந்தவர் குணசேகர் (60). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தன் வீட்டிற்கு சாலையின் ஓரமாக நடந்து வந்த போது, அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவரான திருமழிசை பகுதியை சேர்ந்த யுவராஜ் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்