காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் ஊர்வலம்

கம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2021-07-12 16:49 GMT
கம்பம்: 

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஊர்வலம் கம்பத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டி மற்றும் சைக்கிளில் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி சென்றனர். ஊர்வலம் கம்பம் உத்தமபுரம் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி வடக்கு போலீஸ் நிலையம், ஏ.கே.ஜி. திடல், போக்குவரத்து சிக்னல் வழியாக காந்திசிலையில் நிறைவடைந்தது. 

ஊர்வலத்தில் காங்கிரஸ் நகர தலைவர்கள் போஸ் (கம்பம்), ஜெயப்பிரகாஷ் (கூடலூர்), மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேனியில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கிய ஊர்வலம் நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. 

இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், தேனி நகர தலைவர் முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்