குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு

வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் தீக்குளித்தார்.

Update: 2021-07-12 22:42 GMT
வேப்பந்தட்டை:

குழந்தையுடன் தீக்குளித்தார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் சக்தியராஜ். விவசாயி. இவரது மனைவி சுகந்தி(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சுகந்திக்கும், சக்தியராஜுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து மனமுடைந்த சுகந்தி, வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெயை ஊற்றி குழந்தையுடன் தீ வைத்துக் கொண்டார்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து குழந்தை மற்றும் தாய் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயத்துடன் இருந்த தாய் மற்றும் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கிருந்து குழந்தை சுபஸ்ரீயை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய், குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்