டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலன் என்ன? ஐகோர்ட்டு கேள்வி

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலன் என்ன? ஐகோர்ட்டு கேள்வி.

Update: 2021-07-13 17:17 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தப்படாத வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் மழைநீர் தேங்குவதால், டெங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. இந்த வாகனங்களை அப்புறப்படுத்தவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு இந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், டெங்கு கொசுக்கள் புழுவாக இருக்கும்போது அவற்றை உண்ணக்கூடிய மீன்கள் ஏரிகள், குளங்களில் வளர்க்கப்படுகின்றன. சாலைகளில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தற்போது கொரோனா 2-வது அலை தணிந்துள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்