சிங்கம்புணரி பேரூராட்சியில் ஓட்டு கட்டிடத்தில் 60 ஆண்டு காலமாக நூலகம் இயங்கி வருகிறது. தற்போது கொரோனாவால் நூலகம் மூடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிங்கம்புணரி சுந்தரம் நகர் பகுதியில் நூலக வாசகர் வட்ட கலந்தாய்வுக் கூட்டம் தனியார் பள்ளி இயக்குனர் ராஜமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழாசிரியர் சேவுகமூர்த்தி, சமூக சேவகர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் தனுஷ்கோடி, முத்துப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சிவராமன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.