தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 588 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 6 ஆயிரத்து 588 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-07-14 13:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 6 ஆயிரத்து 588 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காய்ச்சல் முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 01.04.2021 முதல் 14.07.2021 வரை மொத்தம் 6 ஆயிரத்து 588 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்களுக்கு தடுப்பூசி மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
நடைபெறும் இடங்கள்
அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி, காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, மாதாநாகர், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, கணபதி சமுத்திரம், மாதவன்குறிச்சி, ரத்தினபுரி, நாலுமாவடி, விஜயராமபுரம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம், எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராம்நகர் நகர்நல மையம், இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியநத்தம், சுப்பிரணியபுரம், கீழஅரசடி, துப்பாஸ்பட்டி, அய்யனார்புரம், வெள்ளப்பட்டி, மாவிலோடை அங்கன்வாடி மையங்கள், குமாரகிரி, வடக்கு இலந்தைகுளம், நொச்சிகுளம் திருமலாபுரம், கே.வேலாயுதபுரம், காட்டாரங்குளம் சரவணாபுரம் சத்துணவு மையங்கள், விளாத்திகுளம் கலைஞர் கிளினிக், சொக்கலிங்கபுரம், குமரெட்டியாபுரம், சுப்பிரமணியபுரம், ஏ.வேலாயுதபுரம் சமுதாய நலக்கூடம், சிதம்பரபுரம் துணை சுகாதார நிலையம், கீழக்கரந்தை இ-சேவை மையம், அழகாபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்